தூத்துக்குடி அருகே பாலம் அமைக்கப்படாததால் இறந்தவர்களின் உடலை சுமந்தபடி கழுத்தளவு தண்ணீரில் வாய்க்காலை கடக்கும் அவல நிலை காணப்படுகிறது.
ஏரல் அருகே சிறுதொண்டநல்லூர் பஞ்சாயத்திற்கு உட்பட்டது காமராஜர்நல்லூர். இந்த கிராமத்தில் வசிப்பவர்களுக்கு மணலூர் கிராமத்திற்கு கீழ்புறம் சுடுகாட்டு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சுடுகாட்டிற்கு காமராஜர்நல்லூரில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளதால் மழைக்காலங்களின் போது இறந்தவர்களின் உடலை கழுத்தளவு தண்ணீருக்குள் சிரமப்பட்டு தூக்கிச்சென்று வாய்க்காலை கடக்கின்றனர். கால்வாயின் குறுக்கே பாலம் அமைத்து தரக்கோரி 40 ஆண்டுகளாக போராடி வருவதாகவும் பல முறை மனு அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.