தமிழ்நாடு

”சூரப்பா விவகாரத்திலஉண்மை நிலை தெரியாமல் கமல் பேசிக் கொண்டிருக்கிறார்” - அமைச்சர் அன்பழகன்

”சூரப்பா விவகாரத்திலஉண்மை நிலை தெரியாமல் கமல் பேசிக் கொண்டிருக்கிறார்” - அமைச்சர் அன்பழகன்

webteam

சூரப்பா விவகாரத்தில், உண்மை நிலை தெரியாமல் கமலஹாசன் பேசிக் கொண்டிருக்கிறார் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறும் போது “ சூரப்பா விவகாரத்தில், உண்மை நிலை தெரியாமல் கமலஹாசன் பேசிக் கொண்டிருக்கிறார். கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்திக்கப் போகிறோம் என்பதற்காக எதை எதையோ அவர் பேசிக் கொண்டிருக்கிறார்.

சூரப்பா மீது ஊழல் புகார் எழுந்ததால் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அப்போது என்னிடத்தில் எந்த ஊழலும் இல்லை, நான் நியாயமானவன், விசாரணையை எதிர்கொள்ள தயார் என்று பேசிய சூரப்பா, மதுரையில் ஒருவரை வைத்து வழக்கு போட வைத்து, அதில் தன்னையும் இணைத்து உள்ளார். மதுரைக்கும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் சம்பந்தமில்லை.

வழக்கு தொடுக்க வேண்டுமென்றால் அவர் சென்னையில் வழக்கு தொடுத்து இருக்க வேண்டும். மடியில் கனமில்லை என்றால் வழியில் அவர் பயப்படத் தேவையில்லை. பேராசிரியர்கள் நியமனம், துணைவேந்தர் நியமனம் உள்ளிட்டவற்றிற்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை.

துணை வேந்தர் நியமனத்திற்கு தேடுதல் குழுவை அமைப்பது மட்டுமே அரசின் பணி. இதில் தேடுதல் குழு தான் விண்ணப்பங்களை பெற்று, மூன்று பேரை தேர்வு செய்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறது. எனக்கு பயமில்லை, விசாரணையை எதிர் கொள்கிறேன் என்று சொன்னவர், இன்று எதற்காக மதுரையில் போய் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்.

பேராசிரியர் நியமனத்தில் ஏற்கனவே முன்னாள் துணை வேந்தர் கொடுத்த பத்திரிக்கை பேட்டிக்காக , அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு மீது ஏதேனும் புகார் கூற வேண்டும் என்பதற்காகவே கமல் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் உண்மை நிலையை அறிந்து அந்த அறிக்கையை சொல்லவில்லை." என்றார். 

சூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து கமல்ஹாசன் வெளியிட்ட கருத்தை படிக்க >> "நேர்மைக்காக வேட்டையாடப்பட்டால் சும்மா இருக்கமாட்டேன்!" - சூரப்பாவுக்கு ஆதரவாக கமல்