தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி: 500 மீட்டரில் 300க்கும் மேற்பட்ட யோகாசனம் - சிறுமிகள் உலக சாதனை முயற்சி

kaleelrahman

திருக்கோவிலூர் அருகே உலக சாதனை முயற்சியில் ஈடுபட்ட 2 சிறுமிகளுக்கு ஊர் பொதுமக்கள் கைதட்டி உற்சாகம் அளித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் தேவரடியார்குப்பம் கிராமத்தில் உலக சாதனை படைக்கும் விதமாக யாசினி (13) என்ற சிறுமி தொடர்ந்து 500 மீட்டரை, 300க்கும் மேற்பட்ட யோகாசனம் செய்தவாரே கடந்து புதிய முயற்சியில் ஈடுபட்டார். இதேபோல் தீபிகா (10) என்ற சிறுமி தொடர்ந்து 20 நிமிடம் சிறிய மேசையின் மீது சக்கராசனம் செய்து 2 சிறுமிகளும் புதிய சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

இதற்காக அவர்கள் இருவரும் மூன்று மாதமாக பயிற்சியில் செய்துள்ளனர். இந்த நிலையில் இன்று இரண்டு சிறுமிகளும் நோபல் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்ட போது ஊர் மக்கள் அவர்களுக்கு கைதட்டி உற்சாகம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா, திருக்கோவிலூர் வட்டாச்சியர் சிவசங்கரன், மணலூர்பேட்டை உதவி ஆய்வாளர் அகிலன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யாசினி, இந்த சாதனையை முறியடிக்க மூன்று மாதகாலமாக முயற்சி செய்ததாகவும் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் எனவும் தனக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர் மற்றும் உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.