கள்ளக்குறிச்சி விச சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், வழக்கை விசாரணை நடத்திய சிபிசிஐடி-யிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. அதில் சிபிஐ வசம் வழக்கை ஒப்படைத்துள்ளதால் வழக்கு தாமதமாக கூடும் என தமிழ்நாடு அரசு கூறியிருந்தது. இம்மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால் என்ன ஆகிவிடப்போகிறது? என தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் இவ்வழக்கில் தமிழக காவல்துறை ஏற்கனவே விசாரணையை முடித்து விட்டதாக வாதத்தை முன் வைத்தனர்.
ஆனால் தமிழக அரசின் வாதத்தை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் உச்சநீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனக் கூறி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டனர்.