govt hospital
govt hospital pt desk
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி: பிரசவ வார்டில் பணம் கேட்கும் ஊழியர்கள் - அடிப்படை வசதியின்றி அரசு மருத்துவமனை

PT WEB

கள்ளக்குறிச்சி நகர் பகுதியில் மாவட்ட அரசு மருத்துவமனை இயங்கி வந்தது. இது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அனைத்து வகையான சிகிச்சைகளும் அங்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பிரசவம் மற்றும் குழந்தைகள் நலன் சிகிச்சை மட்டும் பழைய மாவட்ட மருத்துவமனை கட்டடத்தில் இயங்கி வருகிறது.

இந்நிலையில் இம்மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகள், பிரசவ அறைக்குள் சென்றவுடன் அவர்களின் உறவினர்களிடம் வேலை ஆட்கள் பணம் வாங்குவதாகவும், கொடுக்கவில்லை என்றால் தரக்குறைவாக நடத்துவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நாள்தோறும் ஏராளமான பெண்கள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், அவர்களுக்கான படுக்கை வசதி இல்லை எனவும் குற்றச்சாட்டு எழுகிறது. சில நேரங்களில் கர்ப்பிணிகளை கீழே படுக்கவைக்கும் அவலநிலையும் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

அதேபோல நோயாளிகளின் அடிப்படை தேவையான குடிநீர் சரியாக வரவில்லை என்றும், கழிவறையில் தண்ணீரும் சரியாக வரவில்லை என்றும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மருத்துவமனை நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த பயனும் இல்லை என்றும் உடனடியாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து மக்களின் அடிப்படை தேவைகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.