தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி கலவரம் - தொடரும் கைது நடவடிக்கை

கள்ளக்குறிச்சி கலவரம் - தொடரும் கைது நடவடிக்கை

webteam

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவி இறந்தது தொடர்பாக கடந்த 17ஆம் தேதி அங்கு பெரும் கலவரம் வெடித்தது. மேலும் பள்ளிக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கு இருந்த பொருட்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்ததால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. அதன் பின்பு போலீசார் அந்தப் பகுதியை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

மேலும் அந்த மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து அதில் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களை சேர்த்து கலவரம் செய்ய தூண்டும் வகையில் தகவல்கள் மற்றும் கருத்துகள் பதிவு செய்ய ஏதுவாக இருந்து, கடந்த 17-ஆம் தேதி பெரும் கலவரம் ஏற்பட காரணமாக இருந்த குற்றத்திற்காக கடலூர் மாவட்டம் சேப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விஜய், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா மட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த துறை பாண்டி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் காச்சகுடி கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் ஆகிய 3 பேரை, வாட்ஸ்அப் குழுவில் இடம்பெற்று வன்மத்தை தூண்டும் கருத்துகளை பதிவு செய்ததோடு மட்டுமில்லாமல் கலவரத்தில் ஈடுபட்டமைக்காக கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் கலவரத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பாக 13 நபர்களையும் வாட்ஸ்அப்பில் குழுக்கள் அமைத்து கலவரத்தை தூண்டியது தொடர்பாக 3 நபர்களையும் ஆக மொத்தம் 16 நபர்களை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளனர்.