கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயா. குழந்தைகளின் நலன் கருதி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரனின் ஈச்சர் வாகனத்தில் அவருக்கு உதவியாக சென்ற விஜயாவுக்கு நாளடைவில் அந்த வாகனத்தை இயக்க ஆர்வம் வந்தது. ஓட்டுநர் உரிமம் பெற்று, சேலம், திருநெல்வேலி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு லோடு வாகனத்தை இயக்கத் தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
சென்னையில் உள்ள அலுவலகத்தில் விஜயாவிற்கு பயிற்சி வழங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் சைரனின் அலறல் சத்தம் கேட்டாலே பயத்துடன் பணிக்கு சென்ற விஜயா, நாளடைவில் மனிதர்களின் உயிர் காக்க ஓட வேண்டும் என உணர்த்தக்கூடிய ஒன்றாக சைரன் ஒலி மாறியதாக கூறினார்.
அவர் கூறுகையில், “ட்ரைவிங் வேலை தெரியும், அதை உபயோகமாக செய்ய வேண்டும் என நினைத்தேன்., அதனால்தான், ஆம்புலன்ஸில் வேலைப் பார்க்கிறேன். ஒருமுறை கச்சிரப்பாளையத்தில் டிப்பர் லாரி ஒரு இளைஞர் மேல் ஏறிவிட்டது. அவரது உடல்நிலை மிக சீரியஸாக இருந்தது. சரியாக அவரை மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்துவிட்டோம். பல திறமைகளை வைத்துக்கொண்டு வீட்டில் முடங்கிக் கிடக்கும் பெண்கள் துணிந்து இத்துறையில் வெளிவர வேண்டும்” என்றார்.
உயிர் காக்கும் மகத்தான சேவையை ஆற்றி வரும் 108 ஆம்புலன்ஸ் பெண் ஓட்டுநர் விஜயா இளம் சமுதாய பெண்களுக்கு முன் உதாரணமாக திகிழ்கிறார் என்பதில் சந்தேகமில்லை.