தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி: பேருந்து படியில் பயணம் செய்த கல்லூரி மாணவன் கீழே விழுந்து பலி!

PT

கள்ளக்குறிச்சியில் தனியார் பேருந்தில் படியில் பயணம் செய்த கல்லூரி மாணவன் தவறி கீழே விழுந்ததில் பின்சக்கரத்தில் நசுங்கி உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள நாகலூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி மகன் அசோக். வயது 19. சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தனது ஊரிலிருந்து தனியார் பேருந்தில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்ததார். அப்போது பேருந்து படியில் நின்று கொண்டு பயணம் செய்த மாணவன், எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் பின்சக்கரத்தில் அடிபட்டு உடல்நசுங்கி உயிரிழந்தார். நீலமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் உறவினர்கள் அதிக அளவு கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.