கச்சத்தீவை மீட்கக் கோரி, சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுக - பாஜக கட்சிகள் ஆதரவளித்த நிலையில், தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
கச்சத்தீவு தொடர்பான தீர்மானத்தில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மீனவர்கள் அனைவரையும் இந்திய குடிமக்களாகவே மத்திய அரசு பார்த்து வருவதாக தெரிவித்தார். கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட வரலாற்று தவறை பிரதமர் மோடியால் மட்டுமே சரி செய்ய முடியும் எனவும் வானதி சீனிவாசன் கூறினார். தொடர்ந்து தீர்மானத்திற்கு பாஜக ஆதரவளித்தது. அதன்பின்னர் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கச்சத்தீவு விவகாரத்தில் திமுக அரசு என்ன செய்தது என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும் என்றார்.
அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்த விவகாரத்தில் 54 முறை கடிதம் எழுதியிருப்பதாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவளித்தது. தமிழர்களின் உணர்வுப்பூர்வமான பிரச்னை என்பதால் அதிமுக ஆதரவளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதன் பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.