தமிழ்நாடு

“அமைச்சர் வேலுமணி பொய் சொல்லி இருக்கிறார்” - கே.எஸ் அழகிரி

“அமைச்சர் வேலுமணி பொய் சொல்லி இருக்கிறார்” - கே.எஸ் அழகிரி

webteam

தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். 

சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. எங்கு பார்த்தாலும் மக்கள் காலை முதல் இரவு வரை காலிக்குடங்களுடன் அலைந்து கொண்டிருக்கின்றனர். ஒரு நாளைக்கு இரண்டு குடம் தண்ணீர் கிடைப்பதே அரிது என மக்கள் புலம்பி வருகின்றனர். 

தற்போது குடிநீர் பற்றாக்குறையை போக்க அரசு தரப்பில் இருந்து லாரி மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.9 ஆயிரத்து 100 டிரிப் மூலம் தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது. பேரூராட்சி, நகராட்சி, கிராம பஞ்சாயத்து என அனைத்து பகுதிகளுக்கும் லாரி சர்வீஸ் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. 

இருந்தாலும் தண்ணீர் பஞ்சத்தால் உணவகங்களும், ஐடி கம்பெனிகளும் இழுத்து மூடப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் தண்ணீர் பஞ்சம் தான் என தெரிகிறது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலுமணி, சென்னையில் பெருமளவு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று வதந்தி கிளப்பியுள்ளதாக அமைச்சர் வெலுமணி தெரிவித்திருந்தார்.

மேலும் பேசிய அவர், தண்ணீர் பிரச்சனையில் எந்த ஓட்டல்களையும் மூடவில்லை என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் தண்ணீர் பிரச்சனையால்தான் சென்னையில் ஓட்டல்களை மூடப்படுவது எனக்கூறுவது தவறான பரப்புரை எனவும் குறிப்பிட்டிருந்தார். ஐடி நிறுவன பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவது வழக்கமானதுதான் எனவும் ஐ.டி. நிறுவனங்களில் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டால் நிவர்த்திசெய்ய அரசு தயாராக உள்ளது எனவும் குறிப்பிட்டார். 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது என தெரிவித்துள்ளார். 

மேலும், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என அமைச்சர் வேலுமணி பொய் சொல்லி இருக்கிறார் எனவும் பக்கத்து மாநில முதல்வர்களை சந்தித்து 2 டி.எம்.சி. நீரையாவது தமிழக அரசு கேட்டுப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.