தமிழ்நாடு

போலி மதிப்பெண் சான்றிதழ் : நீதிபதி ஹரி பரந்தாமன் தலைமையில் விசாரணை குழு

போலி மதிப்பெண் சான்றிதழ் : நீதிபதி ஹரி பரந்தாமன் தலைமையில் விசாரணை குழு

webteam

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குநரகத்தில் 500 மாணவர்களுக்கு போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கியதாக தொடர்பான புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்திருக்கிறார். அதில், ஒரே பதிவெண் கொண்ட இரண்டு சான்றிதழ்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில்‌, 2014ஆம் ஆண்டு முதல் சுமார் 500 மாணவர்களிடம் தலா 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு போலி மதிப்பெண் சான்றி‌தழ் வழங்கியது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில், காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர தேர்வுத்துறை கூடுதல் கட்டுப்பாட்டாளர் ராஜராஜன், கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் கணினி கட்டுப்பாட்டாளர் கார்த்திகை செல்வன் ஆகிய 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். 

இதனையடுத்து காமராஜர் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழு ஒப்புதலுடம் இது தொடர்பாக அந்த 3 பேரிடமும் விசாரணை தொடங்கப்படும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், ஓய்வு பெற்ற  உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காமராஜர் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற மையங்களில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கு முறைகேடாக பணம் வசூலித்தாகவும், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.