சென்னை உயர்நீதிமன்றம், ஞானசேகரன் pt web
தமிழ்நாடு

அண்ணா பல்கலை பாலியல் புகார் | கைதான ஞானசேகரன் வழக்கு.. நாளை தீர்ப்பு!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் எதிரான வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது.

PT WEB

செய்தியாளர்: சுப்பையா

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மாணவி அளித்த புகாரில், ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்தது. கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை 9ஆவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு, ஞானசேகரனுக்கு எதிராக 100 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் இந்த வழக்கில் ஞானசேகரன் ஒருவர் மீது மட்டுமே குற்றஞ்சாட்டப்பட்டது.

பின்னர் இந்த வழக்கின் விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு கடந்த மார்ச் 7ஆம் தேதி மாற்றப்பட்டது. தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை எனவும், ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை காவல்துறை கூறியுள்ளதால், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் எனவும் ஞானசேகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை மகளிர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி தள்ளுபடி செய்தது.

ஞானசேகரன்

இதனையடுத்து சென்னை மகளிர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது, தினந்தோறும் சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. வழக்கில் காவல்துறை தரப்பில் 29 சாட்சிகள் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர். குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் காவல்துறை தரப்பில் சுமார் 75 சான்று ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 20ஆம் தேதி வழக்கின், அனைத்து சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைகளும் நிறைவடைந்த பின்னர் இரு தரப்பினரும் இறுதி வாதங்களை முன்வைத்தனர்.

இருதரப்பு இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில், வழக்கில் மே 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி நாளை காலை 10.30 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பை அறிவிக்கிறார். புகார் அளித்து 5 மாதத்தில் இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்படுகிறது.