சுதந்திர தின விழாவையொட்டி, ஆளுநர் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித் அளித்த தேநீர் விருந்தை நீதிபதிகள் புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் 72-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அங்கு தேசியக்கொடியை ஏற்றிவைத்த தமிழக ஆளுநர் பன்வாரிலால், பாதுகாப்பு படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில், ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜகோபால் உடனிருந்தார். பின்னர் பேசிய பன்வாரிலால், ஆளுநர் மாளிகையில் உள்ள குடும்ப உறுப்பினர்களான அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றியதில் மட்டற்ற மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். பின்னர், ராஜ்பவனில் உள்ள ஊழியர்களின் குழந்தைகள், பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஆளுநர் இனிப்புகளை வழங்கினார்.
இதனிடையே சுதந்திர தின விழாவையொட்டி, ஆளுநர் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித் அளித்த தேநீர் விருந்தை நீதிபதிகள் புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி மட்டும் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக தஹில் ரமாணி பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகளுக்கு பின் வரிசையில் இருக்கை ஒதுக்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தே ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை நீதிபதிகள் புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.