சேலம்-சென்னை இடையேயான எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
சேலம் 8 வழி பசுமைவழி சாலை திட்டம் சென்னையிலிருந்து காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்கள் வழியே அமைக்கப்பட திட்டமிடப்பட்டது. இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்த திட்டத்துக்கு விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையப்படுத்துவதை எதிர்த்து பூ உலகின் நண்பர்கள், நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள் மீதான விசாரணை டி.எஸ் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நடைபெற்று வந்தது.
மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்த பின்னர்தான் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனவும், தற்போது நில அளவீடு பணி மட்டுமே நடைபெற்று வருவதாகவும் மத்திய அரசு சார்பில் கூறப்பட்டது. அனுமதி கிடைத்த பின்னர்தான் முழுமையாக நிலம் கையகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 14ஆம் தேதி வாதங்களை கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு 8 வழிச்சாலை வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவுள்ளது.