model image Instagram
தமிழ்நாடு

தங்க மோதிரம் திட்டத்தை வென்ற Joy Alukkas, Kalyan Jewellers.. செய்கூலி, காப்பீடு 1 பைசா மட்டுமே!

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கூடுதல் செலவை 1 பைசாவில் செய்வதாக கூறி ஒப்பந்தத்தை ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் வென்றுள்ளது.

Praveen Joshva L

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஆட்சிக்கு வந்த தவெக அரசு ஜூன் 23ஆம் தேதியன்று ரூ.755.83 கோடி மதிப்பில் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' தொடங்கி வைக்கப்படவுள்ளதாக அறிவித்தது.

இதற்கான டெண்டர் வெளியிடப்பட்ட நிலையில், பல்வேறு நிறுவனங்களும் அரசிடம் தங்கள் விலைப்புள்ளி விவரத்தினை அளித்தன. இந்த நிலையில், இந்த திட்டத்துக்கு ஜாய் ஆலுக்காஸ் நிறுவனமும், கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் ஜூன் 22 முதல் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் 1 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது என்றும், இதற்காக 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்கள் வழங்க தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகத்தால் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இதில் 11 நிறுவனங்கள் தங்களது விலைப்புள்ளி விவரத்தினை தெரிவித்தன, இதில் ஒரு கிராம் தங்கத்தின் விலையை தவிர்த்து செய்கூலி, காப்பீடு, போக்குவரத்து BIS- தரமுத்திரை போன்ற அனைத்து கூடுதல் கட்டணங்களுக்கும் சேர்த்து 1 பைசா என ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் குறைந்த விலைப்புள்ளியினை அளித்துள்ளது.

மேலும், ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்ற பிற 10 நிறுவனங்களிடம் குறைந்த விலைப்புள்ளி அளித்த நிறுவனத்தின் விலையை ஒப்பிட்டு இசைவு தெரிவிக்க கோரியதில் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் இசைவு தெரிவித்துள்ளது. இதனால் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திற்கும் 70- க்கு 30 என்ற சதவீதத்தில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல இத்திட்டமானது பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான 2026 செப்டம்பர் 15ஆம் தேதி துவக்கி வைக்கப்பட உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.