திருப்பரங்குன்றம், எல்.முருகன் pt web
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் | “ஒட்டுமொத்த மலையும் முருகப்பெருமானுக்குச் சொந்தம்” - இணையமைச்சர் எல்.முருகன்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார். இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி உள்ளிட்டோரும் எல்.முருகனுடன் சாமி தரிசனம் செய்தனர்.

PT WEB

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்து மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எல்.முருகன் கூறுகையில், “நீண்ட நாட்களுக்கு பிறகு திருப்பரங்குன்றம் வந்திருக்கிறோம். 2021 வெற்றிவேல் யாத்திரை தமிழகம் முழுவதும் பாஜக சார்பாக நடத்தப்பட்டது. அந்த யாத்திரையின் ஒரு பகுதியாக அறுபடை வீடுகளுக்கும் நான் வந்திருந்தேன். இன்று இந்த முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகனை தரிசிக்க விட்டு நானும் காடேஸ்வர சுப்ரமணி அவர்களும் வந்திருக்கிறோம். இதைதொடர்ந்து மலை மீது உள்ள காசி விஸ்வநாதரையும் தரிசிக்க உள்ளோம்.

சமீபகாலமாக சிலர் இந்தப் பகுதியில் விரும்பத்தகாத சம்பவங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 1931இல் வந்த நீதிமன்ற தீர்ப்பிலேயே 33 செண்டை தவிர ஒட்டுமொத்த மலையும் முருகப்பெருமானுக்குச் சொந்தம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தீர்ப்புக்கு மாறாக 1983 இல் வருவாய் ஆவணங்களிலிருந்த பதிவுகளில் தமிழ்நாடு அரசாங்கத்தினர் சிக்கந்தர் மலை என்று தவறாக குறிப்பிட்டிருக்கிறார்கள். வருவாய்துறை ஆவணங்களில் திருப்பரங்குன்றம் மலை என்றுதான் இருக்க வேண்டும்.

முப்பதாண்டுகளாக கார்த்திகை தீபமேற்ற வேண்டுமென்று சொல்லி வருகிறார்கள். 1994ல் வழங்கப்பட்ட உயர்நீதிமன்ற ஆணையை இந்து அறநிலையத்துறை மதித்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற முன்வர வேண்டும்.

இந்தக் கோவில் சைவ திருத்தலம்தான். கிராமங்களில் கருப்பசாமி, மதுரைவீரன் போன்ற சாமிகளுக்கு நாம் பலியிடுவது வழக்கம்தான். ஆனால், எந்தவொரு சைவ, வைணவ தளங்களிலும் பலியிடுதல் என்கிற சம்பவம் கிடையாது. அப்படியிருக்கையில், திருப்பரங்குன்றம் மலையின் மீது விரும்பத்தகாத சம்பவங்களை நடத்த சிலர் முன்வந்து இருந்தால், நடத்தியவர்கள் மீது உடனடியாக தமிழ்நாடு அரசாங்கம், காவல்துறை நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.

தேசிய கல்வி கொள்கை ஒரு நாளில் கொண்டுவரப்பட்டது அல்ல. இன்றைய காலகட்டத்திற்கு உலக அளவிலுள்ள சந்தை நிலவரத்திற்கு நாம் போட்டி போடும் அளவிற்கு இளைஞர்களை தயார் செய்வதற்கான பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதேபோல புதிய கல்விக் கொள்கை, சர்வதேச அளவில் ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதற்காகவும், நமது மாணவர்களின் பங்களிப்பை சர்வதேச அளவில் கொடுக்கப்பதற்காக ஊக்குவிப்பதுதான் இந்த தேசிய கல்விக் கொள்கை. புதிய தேசியக் கல்விக் கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கின்ற கல்விக் கொள்கை. தாய்மொழியில்தான் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதுதான் புதிய கல்விக் கொள்கை” எனத் தெரிவித்தார்.