முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி pt desk
தமிழ்நாடு

வேலை வாங்கித் தருவதாக மோசடி | முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப் பதிவு

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

PT WEB

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

கடந்த 2016 - 2021 ஆண்டு அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர், அமைச்சராக இருந்த கால கட்டத்தில் ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மொத்தம் 33 பேரிடம் 3 கோடி ரூபாளை விருதுநகர் அதிமுக பிரமுகரான விஜய நல்லதம்பி என்பவர் மூலமாக பணம் வசூலிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக ரவீந்திரன் என்பவர் சார்பில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி மற்றும் மாரியப்பன் ஆகியோர் மீது விருதுநகர் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடந்து 2022 ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி விருதுநகர் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து ஜனவரி 12ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், ரவீந்திரன் இந்த வழக்கில் காவல்துறையினர் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறை விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

CBI

காவல்துறை தரப்பில் முறையாக பதிலளிக்கப்படாததால், காவல்துறையின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டும் காவல்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி கடந்த மாதம் இந்த வழக்கை இனி சிபிஐ விசாரிக்கட்டும் என உத்தரவு பிறப்பித்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு சிபிஐ அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் மாரியப்பன், விஜய நல்லதம்பி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்து உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ இந்த வழக்கை பதிவு செய்துள்ளது. அடுத்த கட்டமாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பி விசாரணை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.