தமிழ்நாடு

மார்ச் 31-ம் தேதிக்குள் தகுதியுள்ள அனைவருக்கும் நகைக் கடன் தள்ளுபடி : அமைச்சர் ஐ.பெரியசாமி

ஜா. ஜாக்சன் சிங்

தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் வரும் 31-ம் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 165 பயனாளிகளுக்கு அவர்களது நகைகளை வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் பெரியசாமி மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியசாமி, "வரும் 31 ஆம் தேதிக்குள் தமிழகத்திலுள்ள 14 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்" எனக் கூறினார். மேலும், முறைகேடாக நகைக்கடன் பெற்றவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.