தமிழ்நாடு

ஜெயேந்திரர் உடல் இன்று நல்லடக்கம்

Rasus

உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமான காஞ்சி மடாதிபதி சங்கராச்சாரியர் ஜெயேந்திரர் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

மூச்சுத் திணறலுக்காக ஜெயேந்திரர் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை‌ மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காததால் ஜெயேந்திரரின் உயிர் பிரிந்தது. இதனை சங்கரமட நிர்வாகிகள் அறிவித்தனர். அவரது உடல் காஞ்சி சங்கரமடத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஜெயேந்திரர் உடலுக்கு இன்று காலை 7 மணி வரை அஞ்சலி செலுத்தலாம். காலை 8 மணிக்கு மேல் சங்கர மடத்தில், மகா பெரியவர் என்று அழைக்கப்படும் சந்திரசேகரேந்திரர் நினைவிடம் அருகே ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. 1935-ஆம் ஆண்டு பிறந்த ஜெயேந்திரரின் இயற்பெயர் சுப்ரமணியம் மகாதேவ ஐயர் என்பதாகும். ஜெயேந்திரர் தனது 19-ஆம் வயதில் காஞ்சி மடத்தின் இளைய பீடாதியானார். கடந்த 1994-ஆம் ஆண்டு காஞ்சி மடத்தின் 69 ஆவது பீடாதிபதியாக‌ ஜெயேந்திரர் பதவியேற்றார். சமய நெறிகளில் ஆழ்ந்த புலமையுடையவராக இருந்ததால் இந்து சமயத்தினரிடையே செல்வாக்கு மிகுந்தவராக ஜெயேந்திரர் திகழ்ந்தார்.