தமிழ்நாடு

நினைவு இல்லமாக மாற்றப்பட்டிருக்கும் ஜெயலலிதா வாழ்ந்த 'வேதா இல்லம்' இன்று திறப்பு!

webteam

நினைவு இல்லமாக மாற்றப்பட்டிருக்கும் மறைந்த ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லம் இன்று காலை 10.30 மணிக்கு திறக்கப்படுகிறது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைக்கிறார்.

இதனையொட்டி வேதா நிலையம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. கொரோனாவை கருத்தில் கொண்டு வேதா இல்லம் அமைந்திருக்கும் பகுதி முழுவதும் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் வேதா நிலையம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்கவிருக்கும் திறப்பு விழாவிற்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் நினைவு இல்லத் திறப்பு விழாவை ஒட்டி போயஸ் தோட்ட பகுதி முழுவதும் காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பின் கீழ் உள்ளது.

முன்னதாக போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்திய தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக்கும், இழப்பீடு வழங்கிய உத்தரவை எதிர்த்து ஜெ.தீபாவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்குகள், நீதிபதி சேஷசாயி முன் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, ஜெயலலிதா மறைவிற்கு பின், தங்களை வாரிசுகளாக அறிவித்துள்ள நிலையில் வேதா நிலையத்தை அரசுடமையாக்க சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தீபக்கின் வழக்கறிஞர் கூறினார்.


அதற்கு அரசு தரப்பில், கையகப்படுத்தும் நடவடிக்கையில் அனைத்து சட்டவிதிகளும் பின்பற்றப்பட்டதாகவும், வீடு தற்போது மனுதாரர்களின் வசம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. ஜெயலலிதா எப்படி வாழ்ந்தார் என்பதை மக்களுக்கு காட்டவும் நினைவுகளை பாதுகாக்கவும் தான் வேதா நிலையம் நினைவில்லமாக மாற்றப்படுவதாகவும், வணிக பயன்பாட்டுக்காக கையகப்படுத்தப்படவில்லை என்றும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இடைக்கால உத்தரவை பிறப்பித்த நீதிபதி, ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக திறந்து வைக்க, தடை விதிக்க மறுத்துவிட்டார். அதே சமயம் நிபந்தனைகளுடன் நினைவு இல்லத் திறப்பு விழாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் முன்னிலையில் வீட்டில் உள்ள பொருட்களை கணக்கெடுக்க வேண்டியுள்ளதால், நினைவில்லத்துக்குள் பொதுமக்களை அனுமதிக்க கூடாது என்றும் இடைக்கால உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். அதன்படி, இன்று பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது