தமிழ்நாடு

டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக வழக்கு: விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்

kaleelrahman

டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்கக்கோரி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை விசாரிக்கவில்லை என நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்திருந்த மனுவில், "விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவர்களின் நலனுக்காக, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை பிரித்து, விழுப்புரத்தை தலையிடமாக கொண்டு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. துணை வேந்தர் நியமிக்கப்பட்டு, பல்கலைக்கழக கட்டுமானத்திற்காக விழுப்புரம் மாவட்டம், செம்மேடு கிராமத்தில், 70 ஏக்கர் நிலம் அதிமுக அரசால் ஒத்துக்கப்பட்டது.

ஆனால், தற்போதைய அரசின் புறக்கணிப்பால் பல்கலைக்கழகம் இன்னும் பழைய தாலுகா அலுவலகத்தில் செயல்படுகிறது. இதுவரை பல்கலைக்கழகத்திற்கு பதிவாளரும், போதுமான பணியாளர்களும் நியமிக்கப்படாததால், பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அதன் முதுகலை மையத்தில் முதுகலை படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது சட்டத்தை மீறிய செயல். அந்த அறிவுப்புக்கு தடை விதிக்கவேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி.தமிழ்ச்செல்வி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகுவதாக நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார். இதனால் இந்த வழக்கு அடுத்த வாரத்தில் தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் பட்டியலிடப்பட உள்ளது.