சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவு மண்டபம் இன்னும் 5 மாதங்களில் மக்களின் பார்வைக்கு திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கடையில் எம்ஜிஆர் சமாதி அருகே, ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. எம்ஜிஆர் சமாதிக்குப் பின்புறம் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக 15 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் ஜெயலலிதாவின் நினைவு மண்டப கட்டுமான பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். எம்ஜிஆர் நினைவிடம் அருகே பீனிக்ஸ் பறவை வடிவில் 50 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார்.
முன்னதாக ஜெயலலிதா நினைவிடத்தில் அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், ஜெயலலிதா நினைவு மண்டப பணிகள் 60 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாகவும், இன்னும் 5 மாதங்களில் மக்களின் பார்வைக்கு திறக்கப்படும் எனவும் தெரிவித்தார்.