அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை ஒரு நாள் கூட சந்திக்க முடியவில்லை என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
புதிய தலைமுறைக்கு முதலமைச்சர் அளித்த பிரத்யேக பேட்டியில், மன அழுத்தம் இருந்து கொண்டே இருந்தது. பரிகாரம் தேடுவதற்காக ஜெயலலிதா நினைவிடம் சென்றேன் என்றார். 1977 இல் இருந்து அதிமுகவில் இருக்கின்றேன் எனக் கூறிய பன்னீர்செல்வம், 10 ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா என்னை பொருளாளராக நியமித்தார். எனது பணியை நிறைவாக செய்திருக்கிறேன் என்ற மன நிறைவு எனக்கு இருக்கிறது. அமைச்சர்கள் மீது அதிருப்தி காட்டாமல் கடமையை மட்டுமே செய்தேன் என தெரிவித்தார்.
ஜெயலலிதாவை சந்திக்க 75 நாட்களும் மருத்துவமனைக்கு சென்றேன் ஆனால் ஒருநாள் கூட என்னால் சந்திக்க முடியவில்லை என்றும், சந்தேகத்திற்கிடமான கேள்வியை எழுப்ப எனது மனம் இடம் கொடுக்க வில்லை என்றும் முதலமைச்சர் கூறினார். 100 சதவிகித்தில் 10 சதவிகிதம் தான் கூறியிருக்கிறேன் என கூறிய பன்னீர்செல்வம் தனிப்பட்ட முறையில் என் மீது எந்த குற்றமும் கூற முடியாது. பதவியை காப்பாற்றவே அமைச்சர்கள் பேசியுள்ளனர் என கூறினார்.