தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை தொடங்குகிறார் ஆறுமுகசாமி

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை தொடங்குகிறார் ஆறுமுகசாமி

webteam

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்ய உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. பின்னர் செப்டம்பர் 29 ஆம் தேதி அரசாணைகள் பிறப்பித்தது. அதன்படி, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலை, சிகிச்சை முறை, மரணத்திற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி மூன்று மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி இந்த மாத தொடக்கத்தில் சென்னை எழிலக வளாகத்தில் உள்ள கலச மஹாலில் அமைக்கபட்டுள்ள ஆணைய அலுவலகத்தை பார்வையிட்ட ஆறுமுகசாமி, பின்னர் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். விசாரணை தொடர்பான ரகசியங்கள் வெளியில் கசிவதை தடுக்கும் நோக்குடன்,அவரது அறை ஒலி ஊடுருவாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை வரும் திங்கட்கிழமை போயஸ் கார்டனில் இருந்து தொடங்குவதாக ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார். எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விசாரணை முழுவதும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும் என்று கூறினார். அத்துடன் ஜெயலலிதா மரணம் பற்றி தெரிந்தவர்கள் தகவல்களை உறுதிமொழிப் பத்திரவடிவில் நவம்பர் 22ஆம் தேதிக்குள் நேரடியாக தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிட்டார். மேலும் ஜெயலலிதா மரணம் பற்றி தனிப்பட்ட முறையில் நேரடியாக அறிந்தவர்களும், நேரடி தொடர்பு உடையவர்களும் தகவல்களை கூறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.