தமிழ்நாடு

மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு: தமிழக அரசு

webteam

தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு தீவிர நடவடிக்கைகளின் ஒரு முன்னோட்டமாக மக்கள் சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்கப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் வைத்தார். தமிழகத்தில் ஒரு சில சேவைகளைத் தவிர மற்ற அனைத்தும் இயங்காது என அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு, தனியார் பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை முதல் நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.இந்நிலையில், தமிழகத்தில் மக்கள் சுய ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக அரசு, பொதுமக்கள் தாமாகவே முன் வந்து மேற்கொண்ட சுய ஊரடங்கு இன்று இரவு 9 மணிக்கு நிறைவுபெறவுள்ளது. இந்த ஊரடங்கு நிகழ்வு மக்களின் நலன் கருதி நாளை காலை 5 மணிவரை தொடரும் என அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசியப்பணிகள் தொடர்ந்து நடைபெற எந்த தடையும் இல்லை என தெளிவுப்படுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது