மதுரை பழங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது. இதனிடையே போட்டியில் அவிழ்த்துவிடப்பட்ட காளைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துவிட்டதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தில் 16 ஆண்டுகளுக்கு பின் ஜல்லிக்கட்டு போட்டி இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீ ஊர் காவலன் உற்சவ விழாவை ஒட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகளும், 479 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். வாடிவாசல் வழியாக சீறி பாய்ந்த காளைகளை, மாடு பிடி வீரர்கள் லாவகமாக பிடித்து அடக்கினர். வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
16 ஆண்டுகளுக்குப் பிறகு பழங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றதால் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் ஜல்லிக்கட்டை ஆர்வத்துடன் ரசித்தனர். இதனிடையே போட்டியில் அவிழ்த்துவிடப்பட்ட காளைகள், அருகிலுள்ள பசும்பொன் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துவிட்டதாக அங்கு வசிப்போர் கவலை தெரிவித்துள்ளனர்.