தமிழ்நாடு

தடைகளைக் கடந்துவந்த ஜல்லிக்கட்டு

தடைகளைக் கடந்துவந்த ஜல்லிக்கட்டு

webteam

தமிழர்களின் பண்டைய பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் ஜல்லிக்கட்டு, 2006-ம் ஆண்டு முதலே பல்வேறு தடைகளை கடந்து வந்துள்ளது. அதை இப்போது பார்க்கலாம்.

2006 ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது உச்சநீதிமன்றம் வழங்கிய ஆணைகளின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்தது. 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிராணிகளுக்கு இழைக்கப்படும் தீங்கினை தடுத்தல் சட்டப்பிரிவு 22-ன் கீழ், காளைகளையும் சேர்த்து மத்திய காங்கிரஸ் அரசு அறிவிக்கை வெளியிட்டது. இதன் அடிப்படையில், 2014ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதியன்று, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை பிறப்பித்தது. இதையடுத்து, தமிழக அரசு 2014 ஆம் ஆண்டு மே மாதம் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் 16.11.2016 அன்று தள்ளுபடி செய்தது. இதனிடையே, கடந்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி, காளைகள் என்பது காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் தொடர்ந்து இருந்தாலும், ஜல்லிக்கட்டு நடத்த காப்புரிமை தந்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. ‌ஒரு சில அமைப்புகள் இந்த அறிவிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து, அதே ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி தடை விதிக்கப்‌பட்‌டது. இவ்விரு காரணங்களால், 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. இதையடுத்து, தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, தற்போது தமிழக அரசே அவசரச் சட்டம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டு நடத்த‌ப்பட உ‌ள்ளது.