தமிழ்நாடு

யானை தாக்கி ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு - ஒசூர் அருகே சோகம்

ஜா. ஜாக்சன் சிங்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானை தாக்கியதில் ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளது பிதிரெட்டி ஊராட்சி. இங்குள்ள பூனப்பள்ளி கிராமத்தில் நாகராஜன் என்பவரின் ஜல்லிக்கட்டு காளை வயலில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கு வந்த ஒற்றை காட்டு யானை, ஜல்லிக்கட்டு காளையை தந்தத்தால் குத்தி, காலால் மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே காளை உயிரிழந்தது.

இதையடுத்து, கிராம மக்கள் உயிரிழந்த காளை மாட்டுக்கு இறுதிச் சடங்கு செய்து வைத்து அதன் உடலை நல்லடக்கம் செய்தனர். இது, அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், யானை நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து, கிராமத்திற்குள் நுழையாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.