தமிழ்நாடு

சாதனைக்காக சைக்கிளில் இந்தியாவை சுற்றும் இளைஞர்!

சாதனைக்காக சைக்கிளில் இந்தியாவை சுற்றும் இளைஞர்!

webteam

ஜெய்பூரை சேர்ந்த இளைஞர் கின்னஸ் சாதனைக்காக இந்தியாவையே சைக்கிளில் சுற்றி வருகிறார்.

ஜெய்பூரை சேர்ந்த பட்டதாரி இளைஞர் அங்கிட் அரோரா. இவருக்கு சைக்கிள் மூலம் இந்தியாவை சுற்றி கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சியம் உள்ளது. இதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி ஜெய்பூரில் சைக்கிள் பயணத்தை தொடங்கிய இவர், தற்போது வரையிலும் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். சாதனை படைக்க நினைக்கும் இவருக்கு ரவுண்ட் டேபில் கிளப் உதவி வருகிறது.

இதுவரை 10 ஆயிரம் கிலோமீட்டர் வரை பயணித்துள்ள அங்கிட், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சைக்கிள் ஓட்டி வருகிறார். அதன்படி நேற்று இரவு கரூர் வந்த அவரை, ரவுண்ட் டேபில் கிளப் நிர்வாகிகள் வரவேற்று, அவருக்கு தேவையான உதவிகளை செய்தனர். நாள் ஒன்றுக்கு சுமார் 100 கிலோமீட்டர் பயணிக்கும் அங்கிட், தற்போது சேலம் வழியாக கர்நாடகாவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். தற்போதுவரை இந்திய சைக்கிள் பயண கின்னஸ் சாதனையாக 15,222 கிலோமீட்டர் உள்ளது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில், வரும் மே மாதத்திற்குள் 20 ஆயிரம் கிலோமீட்டர் பயணிக்கவுள்ளதாக அங்கிட் கூறுகிறார். மேலும் சைக்கிள் பயணத்துடன், அரசு பள்ளி மாணவர்களின் தரம் குறித்தும் ஆவணப்படங்களை தயாரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.