ஜெகபர் அலி கொலை புதிய தலைமுறை
தமிழ்நாடு

செயல்பாட்டாளர் ஜெகபர் அலி மரணம் | எடப்பாடி பழனிசாமியின் கண்டனமும், அமைச்சர் கொடுத்த விளக்கமும்

சட்டவிரோத கல்குவாரி தொடர்புடைய தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், திட்டமிட்டு சாலை விபத்தை ஏற்படுத்தி, ஜெகபர் அலியைக் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

Jayashree A

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கனிமவள கொள்ளையை தடுக்க முயன்ற ஜெகபர் அலி திடீரென சாலை விபத்தில் மரணமடைந்த சம்பவம் திருமயம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கனிமவள கொள்ளையரின் மேல் நடவடிக்கை எடுக்காமல் புகாரளித்தவரை காட்டிக் கொடுத்துள்ளது இந்த அரசு என்ற எடப்பாடி பழனிசாமியின் பேச்சிற்கு சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி விளக்கம் அளித்தது என்ன என்பதைப்பார்க்கலாம்.

ஜெகபர் அலி

ஜெகபர் அலி...

கனிமவளக் கொள்ளைக்கு எதிராக, அக்கறையாகவும் ஆவேசமாகவும் பேசியவர், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூரு கிராமத்தைச் சேர்ந்த ஜெகபர் அலி. அதிமுகவின் முன்னாள் ஒன்றிய கவுன்சிலரான இவர், திருமயம் பகுதியில் அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகள் குறித்து தாசில்தாரிடம் புகார் அளித்திருந்தார்.

அது கசிந்துவிட்டதாக கடந்த 13 ஆம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார் ஜெகபர் அலி. அதில் “திருமயம் அருகே துளையானூர் கிராமத்தில் ஏராளமான சட்டவிரோத கல்குவாரிகள் உள்ளன. அதில் அதிக அளவில் கனிம கொள்ளை நடக்கிறது. குறிப்பாக ஆர்ஆர் குரூப் என்ற நிறுவனம் அதிக அளவில் கனிம கொள்ளையில் ஈடுபகிறது.

70 ஆயிரம் டாரஸ் லாரி அளவிற்கு வெட்டப்படும் பாறை கற்களை அவர்கள் பதுக்கி வைத்துள்ளனர். இது குறித்து திருமயம் வட்டாட்சியருக்கு புகார் தெரிவித்தும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் தகவலை கசிய விட்டதால் சம்பந்தப்பட்ட நபர்கள் பதுக்கி வைத்திருந்த கற்களை மீண்டும் குவாரியில் கொண்டு சென்று கொட்டுகின்றனர். உடனடியாக மாவட்ட ஆட்சியர் கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த வெள்ளியன்று, பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு திரும்பியபோது வாகனம் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தன் கணவரின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவியதாகவும், அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஜெகபர் அலியின் மனைவி மரியம்.

மரியம் அளித்த புகாரின் பேரில், குற்றச்சாட்டுக்கு உள்ளான நிறுவனங்களின் உரிமையாளர்கள் ராசு, ராமையா, லாரி உரிமையாளர் முருகானந்தம் மற்றும் அவரது ஓட்டுநர் முருகேசன் ஆகியோர் மீது, திருமயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். தொடர்ந்து முருகானந்தம் உள்பட 4 பேரை கைது செய்துள்ளனர் காவல்துறையினர். தற்போது நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டும் உள்ளனர்.

திட்டமிட்ட கொலை

இவர்களிடம் நடத்திய விசாரணையில், சட்டவிரோத கல்குவாரி தொடர்புடைய தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், திட்டமிட்டு சாலை விபத்தை ஏற்படுத்தி, ஜெகபர் அலியைக் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரத்தில் வேறு யாரேனும் சம்பந்தப் பட்டிருக்கிறார்களா என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் ஜெகபர் அலி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமியின் கண்டனம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் அஇஅதிமுக ஒன்றிய குழு உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளரும், சமூக ஆர்வலருமான திரு.ஜெபகர் அலி அவர்கள், சமூக விரோதிகளால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் சமூக விரோதிகள் லாரி ஏற்றி படுகொலை செய்திருக்கிறார்கள் என்ற செய்தி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை திசை திருப்பி வருகிறது இந்த அரசு.

கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு. ஜெகபர் அலி அவர்கள் இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதியின் பதில்

இதற்கு பதிலளிக்கும் விதமாக எஸ் ரகுபதி தனது எக்ஸ் பதிவில், “புதுக்கோட்டை அதிமுக முன்னாள் கவுன்சிலர் திரு. ஜெபகர் அலி உயிரிழந்த சம்பவத்தில் முதல் கட்டமாக லாரி டிரைவர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரமான விசாரணை நடந்து வருகிறது. விரைவில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். சம்பவம் நடந்து சில மணி நேரங்களிலேயே சந்தேகத்திற்கிடமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி ஏன் இத்தனை அவசரப்படுகிறார் என்று புரியவில்லை.

லாரி ஓட்டிச்சென்ற லாரி டிரைவரை கைது செய்தது வழக்கை திசை திருப்பும் செயலா? முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அடிப்படை புரிதல் கூட இல்லாமல் இவ்வாறு அவதூறு பரப்பலாமா? தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தையே டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்னவர்தானே என்று கடந்து போக வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.