தமிழ்நாடு

1,111 ஆசிரியர்கள் மீதான பணியிடை நீக்கம் ரத்து

webteam

ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது, ஆயிரத்து 111 ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட பணியிடை நீக்க நடவடிக்கையை ரத்து செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி, கடந்த ஜனவரி 22ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் ஜாக்டோ ஜியா கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. அப்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆயிரத்து 111 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் ரத்து செய்துள்ளது. 

இதேபோல, தொடக்கக் கல்வித்துறை இயக்குநரத்தின் கீழ் வரும் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீதான பணியிடை நீக்கமும் ரத்து செய்யப்படும் எனத் தெரிகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும், பணியிடமாற்றம் மற்றும் 17பி பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட நோட்டீஸ் நடவடிக்கைகளை அரசு திரும்பப்பெறவில்லை என ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.