தமிழ்நாடு

’ஜெயக்குமாருக்கு ஏன் பதவி கொடுக்கவில்லை?’ - மகன் ஜெயவர்தன் சொல்லுவது என்ன?

Sinekadhara

ஜெயக்குமாருக்கு ஏன் பதவி கொடுக்கவில்லை என்பது குறித்து அவரது மகன் ஜெயவர்தன் பேட்டியளித்துள்ளார். 

கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக்கூட்டத்தில் சட்டதிருத்த விதிகள் குறித்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர்கள் குறித்த அறிக்கை அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார். அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பெயர் இடம்பெறவில்லை. 

இந்நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமியை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் ஜெயக்குமாரின் மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயவர்தன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜெயவர்தன், இடைக்கால பொதுச் செயலாளரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன் என்றார். தந்தைக்கு பதவி கொடுக்கப்படவில்லையே என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயவர்தன் கட்சி தலைமைதான் முடிவெடுக்கும்; ஆனால் ஜெயகுமார் ஏற்கனவே அமைப்பு செயலாளர் தான் எனத் தெரிவித்தார்.

முன்னதாக, 

அதிமுகவின் கழக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் கேபி.முனுசாமியும், நத்தம் விஸ்வநாதனும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இபிஎஸ் முன்பு வகித்த தலைமை நிலைய செயலாளர் பதவியில் தற்போது எஸ் பி வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைப்புச் செயலாளர்களாக செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம், ப. தனபால், கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், ஓஎஸ்.மணியன், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, ராஜன் செல்லப்பா, பெஞ்சமின், பாலகங்கா ஆகிய 11 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக இருந்த தமிழ்மகன் உசேன் அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து சி. பொன்னையன் விடுவிக்கப்பட்டு அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.