தமிழ்நாடு

நடந்தது விபத்தா? படுகொலையா?: சயானிடம் விசாரணை தீவிரம்

Rasus

கொடநாடு காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சயானின் கார் விபத்திற்குள்ளானது திட்டமிட்ட படுகொலையா என சந்தேகம் எழுந்துள்ளது.

கொடநாடு காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கேரளாவைச் சேர்ந்த சயான் பாலக்காடு அருகில் சாலை விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் சயானின் மனைவி மற்றும் மகள் உயிரிழந்தனர். திருட்டு காரில் பயணித்தபோது இந்த விபத்து நேர்ந்ததாக கேரளா போலீசார் முதலில் தெரிவித்தனர்.

சயானுக்கு கோவையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் உயிரிழந்த அவரது மனைவி, மகள் ஆகிய இருவரின் கழுத்திலும் வெட்டுக்காயங்கள் இருப்பதால், நடந்தது விபத்தா அல்லது திட்டமிட்ட படுகொலையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கேரள காவல்துறையினர் கோவை சென்று சயானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் எழுந்துள்ள சந்தேகங்கள் தொடர்பாக சயானிடம் அவர்கள் கேள்விகளை முன்வைத்துள்ளதாக தெரிகிறது. இதனிடையே, பாலக்காடு மருத்துவமனையில் இருந்து சயானின் மனைவி மற்றும் மகளின் உடல்கள் திருச்சூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.