தமிழ்நாடு

"50 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத தோல்வி இது" - சசிகலா பேச்சு

கலிலுல்லா

அதிமுகவின் 50 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பயணித்தால் மீண்டும் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆட்சியை அமைக்கலாம் என ஜெயலலிதா பிறந்தநாளில் சசிகலா தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் தோட்டத்தில் சசிகலா எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து இங்குள்ள காது கேளாதோர் வாய் பேச முடியாதோர் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளில் சசிகலா பங்கேற்றார். இந்த விழாவில் பேசிய சசிகலா, ''இந்த 74 வது பிறந்த நாளில் ஜெயலலிதாவின் இலட்சியத்தை வென்றெடுப்போம். நாம் எல்லோரும் இந்த நாளில் ஒன்றிணைந்து உறுதியேற்போம்.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபொழுது தமிழக உரிமைகளை எந்த விதத்திலும் எங்கும் விட்டுக்கொடுத்ததில்லை. எனக்கான தனியான ஒரு வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. சசிகலா., எம்ஜிஆர் உருவாக்கிய இந்த இயக்கத்தை, அவர் கொடுத்த சட்ட விதிகளின்படி அப்படியே நடத்தி காட்டியவர் ஜெயலலிதா என்று கூறினார்.

ஜெயலலிதாவின் நம்பிக்கை வீண்போகாமல் காத்துக் கொள்வது நமது அனைவரின் கடமையாகும். 50 ஆண்டுகள் வரலாற்றில் இந்த இயக்கம் இது போல் தொடர் தோல்வியை கண்டதில்லை. இதை மனதில் எண்ணி பார்த்தால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற இந்த நாளில் உறுதி ஏற்போம் என்று கூறினார், ஒன்றிணைந்தால் உண்டு வாழ்வு - இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வு இதை எண்ணிப் பார்த்த நாம் செயல்பட வேண்டும் என்றார்.