இல்லாத கண்மாய்க்கு தடுப்பணை கட்டியதாக 4.6 லட்சம் பணம் முறைகேடாக பயன்பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் நடராஜபுரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "பனங்குடி கிராமமத்தில் 1 ஊரணி, 17 கண்மாய்கள் உள்ளன. இந்த கிராமத்தினர் விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். பனங்குடி கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் 4.6 லட்சம் மதிப்பீட்டில் வீரையன் கண்மாயில் தடுப்பணை கட்டப்பட்டதாக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 2020 அக்டோபர் 14-ஆம் தேதி அனுமதி வழங்கப்பட்டதாகவும், இதற்காக 16 நபர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், மூன்று மாதங்களில் பணிகள் நிறைவடைந்ததாகவும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பனங்குடி கிராமத்தில் 18 கண்மாய்கள் உள்ள நிலையில் வீரையன் கண்மாய் எனும் பெயரில் எந்த கண்மாயும் இல்லை. ஆனால், அந்த கண்மாயில் தடுப்பணை கட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜா, தவசு, பிரபு ஆகிய மூவரும் தடுப்பணை கட்டுமான பணியில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரித்த போது பனங்குடி பஞ்சாயத்து எழுத்தர் முறைகேட்டில் ஈடுபட்டு தடுப்பணை கட்டுவதற்கான பணத்தை எடுத்துக் கொண்டது தெரியவந்தது.
பனங்குடி பஞ்சாயத்து எழுத்தர் 2000 ஆம் ஆண்டு முதல் 21 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகிறார். பனங்குடி அவரது சொந்த ஊர். 21 ஆண்டுகளாக இது போல பல திட்டங்களில் முறைகேடுகள் செய்து பொதுப் பணத்தை முறைகேடாக பயன்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக கிராமத்தினருடன் மாவட்ட ஆட்சியரிடமும், முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
ஆகவே வழக்கறிஞர் ஆணையரை நியமித்து வீரையன் கண்மாய் குறித்தும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டதாகக் கூறப்படும் தடுப்பணை குறித்து ஆய்வு செய்யவும், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி ஆனந்தி அமர்வு, இந்த வழக்கை பொறுத்தவரை பொதுமக்களின் வரிப்பணம் முறையாகப் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. வழக்கு குறித்து, ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர், கண்மாயில் தடுப்பணை கணக்குகளை ஆய்வு செய்யவும், மேலும் நேரடியாக சென்று ஆய்வு அறிக்கையை சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அறிக்கையின்படி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதுதொடர்பாக, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்ட புகார் மனுவில், "புனையப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் கட்டப்பட்டதாக கூறப்படும் வீரையன் கண்மாய் தடுப்பணையை காணவில்லை. நாங்கள் பலமுறை தேடிப்பார்த்தும் இந்த தடுப்பணையை இதுநாள் வரை கண்டுபிடிக்க முடியவில்லை" என வடிவேலு கிணற்றை காணோம் என சொல்வது போல் குறிப்பிட்டுள்ளனர்