தமிழ்நாடு

மதுரை: குறிப்பிட்ட சமுதாய நபரை வேட்பாளராக்க ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

Sinekadhara

மதுரையில் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த நபரை வேட்பாளராக தேர்வு செய்யுமாறு அதிமுக தலைமைக்கு கோரிக்கை வைத்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த இரண்டு முறையும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது. 2011 இல் ஏ.கே. போஸ் மற்றும் 2016 இல் ராஜன் செல்லப்பா ஆகியோர் வென்றுள்ளனர். இருவருமே முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 2021 சட்டமன்ற தேர்தலில் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் ராஜன் செல்லப்பா போட்டியிட உள்ளதாகவும், மதுரை வடக்கு தொகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழலில், மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அகமுடையார் இளைஞர் பேரவை சார்பில் அதிமுக தலைமைக்கு கோரிக்கை வைத்து சர்ச்சைக்கு உரிய வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில், "அதிமுக தலைமையே! மதுரை மாநகர் மாவட்ட சட்டமன்ற தொகுதியில் அதிகம் வசிக்கும் முக்குலத்தோர் அகமுடையார் சமுதாயத்தை புறக்கணிக்க கூடாது, முக்குலத்தோர் அகமுடையார் அதிமுக நிர்வாகிகளை வேட்பாளராக தேர்வு செய்யவேண்டும்", "இறக்குமதி வேட்பாளரை விடமாட்டோம்" என்ற வாசகங்கள் அடங்கியுள்ளன.

தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையிலும், இதுபோன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்திலும், மதுரை மக்கள் மத்தியிலும் சர்ச்சையாக மாறியுள்ளது.