தமிழ்நாடு

உலக யோகா தினம்: ஆன்லைன் வழியில் 'சிம்ம க்ரியா'வை கற்றுத் தரும் ஈஷா மையம்

நிவேதா ஜெகராஜா

வரும் ஜூன் 21-ம் தேதி, உலக யோகா தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, ஈஷா மையம் சார்பில், சிறப்பு இசை நிகழ்ச்சி மற்றும் யோகா கற்றுக்கொடுக்கும் நிகழ்வு நாளை (ஜூன் 19) மாலை 6 மணிக்கு ஆன்லைன் வாயிலாக நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட செய்தியில், 'எங்களின் இந்த முயற்சி, கொரோனா பாதிப்பால் ஏற்பட்டிருக்கும் மன அழுத்தம், பயம், உடல் நல பாதிப்பு போன்றவற்றிலிருந்து மக்களை வெளிக்கொணர உறுதுணையாக இருக்கும்.

சுமார் ஒன்றரை மணி நேரம் நடக்கும் இந்த நேரடி ஒளிப்பரப்பு நிகழ்ச்சியில், இசை கலைஞர்கள் பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி சிவ சிதம்பரம், கலைமாமணி காய்த்ரி கிரீஷ், அனுஷா தியாகராஜன் ஆகியோரின் இசை நிகழ்ச்சி அமையும். இவர்களுடன், யூ.பி.ராஜூ மற்றும் நாகமணி ராஜூ தம்பதியினரின் மாண்டலின் இசை, நெய்வேலி எஸ்.ராதாகிருஷ்ணாவின் வயலின் இசை, ராஜாராமனின் கடம் இசை, என்.ராமகிருஷ்ணனின் மிருதங்கம் இசை நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற உள்ளது.

இவற்றுக்கு இடையில், யோகா தினம் தொடர்பாக ஜகி வாசுதேவின் உரையும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 'சிம்ம க்ரியா' என்ற யோக பயிற்சியை கற்றுக்கொடுக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சி ஈஷாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலான 'Sadhguru Tamil' சேனலில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும். அதன்வழியாக அனைவருமே காணொளியை கண்டு பயனடையலாம்' என்று ஈஷா மையம் தெரிவித்துள்ளது.