கிராம மக்களின் வாழ்வியலில் விளையாட்டுப் போட்டிகள் மூலம் புத்துணர்வு மற்றும் ஆரோக்கியத்தைக் கொண்டு வரவும், விளையாட்டை கிராம மக்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாக மாற்றவும் கிராமோத்சவ திருவிழாவை ஈஷா ஆண்டுதோறும் நடத்துகிறது. அந்த வகையில், ஈஷா சார்பில் ஆண்டுதோறும் கிராமங்களுக்கு இடையே நடைபெறும் ‘பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவ’ விழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈஷா சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக ஆண்களுக்கான வாலிபால் போட்டிகளும், பெண்களுக்கான த்ரோபால் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் முதல்கட்ட கிளஸ்டர் அளவிலான போட்டிகள் 5 தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் நடைபெற்றது. 162 இடங்களில் நடைபெற்ற முதற்கட்டப் போட்டிகளில் 5,000 அணிகள் மற்றும் 43,144 வீரர் வீராங்கணைகளும் பங்கேற்றனர். இதில் 10,311 பேர் கிராமங்களில் வசிக்கும் குடும்பப் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 5 மாநிலங்களில் மண்டல அளவில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் தேர்வான அணிகளுக்கான லீக் மற்றும் அரையிறுதிப் போட்டிகள் டிச 27 மற்றும் 28ஆம் தேதிகளில் நடைபெறுகின்றன. இதில் வெற்றிபெறும் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டிகள் டிச 29-ஆம் தேதி ஆதியோகியின் முன்பு நடைபெறுகிறது. இந்த இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக பிரபல கிரிக்கெட் வீரர் சேவாக் கலந்துகொள்ள இருக்கிறார்.
மேலும், இந்த இறுதிப்போட்டியின்போது நாதஸ்வரம் தவில், பஞ்சரி மேளம், சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மற்றும் 1,000 பேர் கலந்துகொள்ளும் வள்ளி கும்மி, 500 பேர் பங்கேற்கும் ஒயிலாட்டம் நடைபெற இருக்கிறது. அதோடு, பொதுமக்களுக்கான ரங்கோலி, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட இருக்கின்றன.
விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதால் கிராமப்புற இளைஞர்கள் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாவதில் இரூந்து விடுபடுகின்றனர். மேலும் கிராமங்களில் சாதி, மத, இன வேறுபாடுகளைத் தாண்டி மக்கள் ஒன்றிணையவும் வாய்ப்பு மேம்படுகிறது. குறிப்பாக கிராமப்புற பெண்கள் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு விளையாடுவது இல்லை, இந்த நிலையை மாற்றி அவர்களும் விளையாடுவதற்கான களத்தை கிராமோத்சவ விழா அமைத்துத் தருகிறது