தமிழ்நாடு

மன அழுத்தத்தை குறைக்க ஆன்லைன் வழியாக 3 நாள் இலவச யோகா வகுப்பு: ஈஷா ஏற்பாடு

நிவேதா ஜெகராஜா

கொரோனா பேரிடர் காலத்தில், மக்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக ஆன்லைன் வழியாக 3 நாள்களுக்கு இலவச யோகா வகுப்பு நடத்தப்படுவதாக ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட செய்தியில், 'கொரோனா பெருந்தொற்று பரவி வரும் இந்த சவாலான காலத்தில் ஈஷா சார்பில் 'உயிர் நோக்கம்' என்ற யோகா வகுப்பு, ஆன்லைன் வாயிலாக ஜூலை 23-ம் தேதி முதல் ஜூலை 25-ம் தேதி வரை இலவசமாக நடைபெறவுள்ளது.

காலை 6.30 முதல் 8.30 மணி வரை, மதியம் 11 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை என 3 வேளைகளில் இந்த வகுப்பு தினமும் 2 மணி நேரம் நடக்கும். பங்கேற்பாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இதில் ஏதேனும் ஒரு நேரத்தை தேர்வு செய்துகொள்ளலாம்.

12 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வயதினரும் இந்த வகுப்பில் கலந்துகொள்ளலாம். இதில் கற்றுக்கொடுக்கப்படும் யோகா பயிற்சிகளை தினமும் செய்து வருவதன் மூலம் முதுகுத்தண்டு வலுப்பெறும், மூட்டு வலியில் இருந்து விடுதலை பெறலாம், மன அழுத்தம் குறையும், உடல் ஆரோக்கியம் மேம்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் isha.co/Uyirnokkam என்ற வலைதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். பதிவு செய்ய உதவி தேவையெனில் 7383673836 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் செய்யலாம். முன்பதிவு ஜூலை 21-ம் தேதி மதியம் 12 மணியுடன் நிறைவு பெறுகிறது.

நிறைவு நிகழ்ச்சியாக ஜூலை 25-ம் தேதி இரவு 7 மணிக்கு தமிழில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜகி வசுதேவின் 'ஆனந்த சங்கமம்' நிகழ்ச்சி ஆன்லைனில் நடைபெறும். இதில் அனைத்து வயதினரும் கலந்துகொள்ளலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.