தமிழ்நாடு

சிறைக் கைதிகளுக்கு சிறப்பு யோகா வகுப்புகளை நடத்தும் ஈஷா அறக்கட்டளை!

jagadeesh

கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்துள்ள நிலையில், தமிழகத்திலுள்ள சிறைக் கைதிகளுக்கு ஆன்லைன் மூலம் சிறப்பு யோகா வகுப்புகளை ஈஷா அறக்கட்டளை நடத்துகிறது.

இதுதொடர்பாக ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட செய்திக் குறிப்பில் 'ஈஷா அறக்கட்டளை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மத்திய சிறைகள், பெண்களுக்கான சிறப்பு சிறைகள் மற்றும் மாவட்ட சிறைகளில் சிறப்பு யோகா வகுப்புகள் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி 10 நாள்கள் ஆன்லைன் வாயிலாக நடைபெறவுள்ளன. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, கோவை, சேலம், மதுரை, கடலூர், பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள மொத்தம் 18 சிறைகளில் இந்த வகுப்புகள் நடைபெற உள்ளன.

ஜகி வாசுதேவால் பயிற்சி அளிக்கப்பட்ட யோகா ஆசிரியர்கள் இந்த வகுப்பை நடத்தவுள்ளனர். கொரோனா பாதிப்பு மிகுந்த இந்தச் சூழலில் சிறைக் கைதிகள் மற்றும் காவலர்களுக்கு உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதில் சிம்ம க்ரியா, உப யோகா மற்றும் நமஸ்கார் யோகா உள்ளிட்ட எளிமையான அதேசமயம், சக்தி வாய்ந்த பயற்சிகள் கற்றுக்கொடுக்கப்படும்.

குறிப்பாக, இந்த யோகா பயிற்சிகளை செய்வதன் மூலம் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியும், நுரையீரல் திறனும் அதிகரிக்கும். மனதளவில் சமநிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.