தமிழ்நாடு

ஐஆர்சிடிசி சார்பில் ஆன்மிக சுற்றுலா முன்பதிவு தொடக்கம்

கலிலுல்லா

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி சார்பில் கோவையில் இருந்து ரயில் மூலம் அயோத்தி, காசி உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்வதற்காக முன்பதிவு தொடங்கியுள்ளது.

பல்வேறு சுற்றுலா திட்டங்களை ஐஆர்சிடிசி செயல்படுத்தி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் வழிபாட்டுத்தலங்கள் மக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளன. மனச்சோர்வில் இருக்கும் மக்கள் நிம்மதியாக வழிபாடு செய்யும் வகையில் ஐஆர்சிடிசி மீண்டும் சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக, பாரத தரிசன சிறப்பு ரயில் மூலம் அயோத்தியா, காசி, அலகாபாத், பூரி, கோனார்க் ஆகிய ஆன்மிக இடங்களைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா ரயில் பயணம் வரும் நவம்பர் 1 ஆம் தேதி மதுரையில் இருந்து தொடங்குகிறது. இந்த ரயில், கோவை, ஈரோடு, ஜோலார்பேட்டை, சென்னை வழியாக செல்லும்.

11 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு ரூபாய் 11 ஆயிரம் கட்டணமாகும். இதில், ரயில் பயண கட்டணம், தங்கும் வசதி (ஹால்), வாகன போக்குவரத்து, காலை, மதியம், இரவில் சைவ உணவு ஆகியவை அடங்கும். மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்கள் எல்டிசி சலுகைகளைப் பெறலாம். இந்த சுற்றுலா குறித்த கூடுதல் விவரங்கள் முன்பதிவுக்கு ஐஆர்சிடிசி-ன் கோவை அலுவலகத்தை 9003140655, 828793196 5 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் அல்லது www.irctctourism.comஎன்ற இணையதளத்தில் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.