துணைவேந்தர் நியமன முறைகேடு புகார் தொடர்பாக ஆளுநர் மாளிகை தற்போது விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கில் பணம் பறிமாறப்பட்டுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குற்றம்சாட்டியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஆளுநர், ஊழல் பற்றி பொதுமேடைகளில் பேசுவது தமிழக மக்களுக்கு எவ்வித பலனையும் கொடுக்காது எனக் குறிப்பிட்டதோடு, ஊழல் புகாருக்கு உள்ளானவர்களை ஆளுநர் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அதேசமயம் 2017-ம் ஆண்டு மே மாதம் அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் முறைப்படி, தேடுதல் குழுவில் உள்ள 3 பேரில் இருந்து தகுதியின் அடிப்படையில் தன்னை தேர்வு செய்ததாக சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில், தனிப்பட்ட நபர்கள் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக ஆளுநர் மாளிகை கூறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வியாளர்கள் தெரிவித்த தகவலின் பேரிலேயே ஆளுநர் கவலை தெரிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2018-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 9 துணைவேந்தர்களும் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையிலேயே நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.