ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கான சிபிஐ காவல் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில் அவர், சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, அவரை கடந்த 21-ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. டெல்லி சிறப்பு நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து, ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து சிபிஐ விசாரித்து வந்தது. சிபிஐ காவல் இன்றுடன் நிறைவடைவதால், நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார். காவல் மேலும் நீட்டிக்கப்படாவிட்டால், நீதிமன்ற காவலில் ப.சிதம்பரம் சிறையில் அடைக்கப்படுவார்.
இதனிடையே செப்டம்பர் 2-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் இருக்கத் தயார் என ப.சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை தொடர்பாக அந்த வழக்கு விசாரணையின்போது, ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இதனைக் கூறியபோது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா எதிர்ப்பு தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இதனைக் கூறினால் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை என்றும் துஷார் மேத்தா தெரிவித்தார். இந்த நிலையில் ப.சிதம்பரம் சிறை செல்வாரா அல்லது மீண்டும் சிபிஐ காவலில் இருப்பாரா என்பது இன்று தெரியவரும்.