தமிழ்நாடு

இன்று தொடங்குகிறது அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளுக்கான விசாரணை

நிவேதா ஜெகராஜா

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று முதல் விசாரிக்கப்படுகின்றன.

வானகரத்தில் கடந்த மாதம் 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம், அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க பட்டியலிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தரப்பில் தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது.

இந்த வழக்கை யார் விசாரிப்பார் என தலைமை நீதிபதியே முடிவு எடுக்கட்டும் என தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார். அதன்படி இன்று முதல் வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது. இந்த வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.