தமிழ்நாடு

சர்வதேச மகளிர் தினம்: தமிழகத்தில் களைகட்டிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

kaleelrahman

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் பாலின சமத்துவ விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

சர்வதேச மகளிர் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையில் சமூக நலத்துறை மற்றும் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் இணைந்து பாலின சமத்துவ விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியை நடத்தியது. புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு மினி மாரத்தானில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பெண்களை மதிக்க வேண்டும், ஆணும் பெண்ணும் சரிசமம் உள்ளிட்டவற்றை பொது மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதேபோல் உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று ஒரு நாள் மட்டும் காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை நுழைவுக் கட்டணமின்றி சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டு ரசிக்கலாம் என மாமல்லபுரம் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.