தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவதால் இந்த பட்ஜெட் வழக்கமான முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட்டாக அமைந்துள்ளது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல்ச் எய்தார்.
இதில் தமிழகத்தில் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியற்றிற்கு முக்கியத்தும் அளிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்பு - பெண்களின் பாதுகாப்பிற்கான கண்காணிப்பை மேலும் மேம்படுத்த சென்னை, தாம்பரம், ஆவடி, மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய ஐந்து நகரங்களுக்கு விரிவான சிசிடிவி கண்காணிப்பு திட்டங்களுக்கு மொத்தம் 75 கோடி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை வழங்குவதற்காக சிறப்பு திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டுள்ளது.
போதை பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு:
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் அதன் விழிப்புணர்வுக்காக பல்வேறு துறைகளில் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பு செய்ய ஒரு இயக்கம் மேலாண்மை மாடல் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சுமார் 17000 போதை எதிர்ப்பு மன்றங்கள் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் சிறந்த போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்களுக்கு மாவட்டம் மற்றும் மாநில அளவில் பரிசுகள் வழங்கப்படும்.. சுமார் 4 லட்சம் மாணவர்கள் உறுப்பினராக சேர்க்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த நான்காண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் போதை பொருள் எதிர்ப்பு உறுதி மொழியை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
போதை பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக அரசு மருத்துவமனைகளில் 25 போதை மறுவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
போதைப் பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை கிடைப்பது குறித்து புகார் அளிக்க போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டிற்கான அலைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது...
குறிப்பாக கல்வி நிறுவனங்களை சுற்றி போதைப் பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையை தடுக்கும் வகையில் சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் 73 ஆயிரத்து 616 நபர்கள் கைது செய்யப்பட்டு 21 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டும் உள்ளன.
சட்டம் ஒழுங்கு - சட்டம் ஒழுங்கை பேணி காக்க அதிகபட்ச முன்னுரிமை வழங்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கை மேலும் வலுப்படுத்தும் வகையில், 11 ஆயிரம் ஆண் காவலர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.