விஜயகாந்த்
விஜயகாந்த் கோப்புப்படம்
தமிழ்நாடு

மூச்சுவிட சிரமம்.. உடல்நிலையில் பின்னடைவு... விஜயகாந்த்-க்கு தீவிர சிகிச்சை!

ஜெனிட்டா ரோஸ்லின்

வழக்கமான பரிசோதனைக்காக தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது மூச்சுவிடுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளதால் வெண்டிலேட்டரின் உதவிகொண்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தேமுதிக நிறுவனர் மற்றும் தலைவர் விஜயகாந்த் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ததை தொடர்ந்து, அதற்காக ஒவ்வொரு மாதமும் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்வது வழக்கம். அப்படியே தற்போதும் (நேற்று முன்தினம்) அனுமதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அப்படியான பரிசோதனையின்போதே கொரோனா உறுதியானதாக தெரிகிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த், நவம்பர் 18 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிசம்பர் 12 ஆம் தேதி வரை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இதற்கிடையே அவர் உடல்நிலை குறித்து பல வதந்திகளும் வெளியாகி தொண்டர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் பிரேமலதா விஜயகாந்த், ’வதந்திகளை நம்ப வேண்டாம். அவர் நலமோடு இருக்கிறார்’ என்று வீடியோவினை வெளியிட்டிருந்தார்.

அதன்பின் டிசம்பர் 14-ம் தேதி விஜயகாந்த் தேமுதிக மாநாட்டில் பங்கேற்றார். அப்போதும் முழுமையாக சரியாகாமல் சற்று தடுமாறியபடியே அவர் இருந்தார்.

இந்தநிலையில் வீடு திரும்பிய அவர் கடந்த 26 ஆம் தேதி (நேற்று முன்தினம்) வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

விஜயகாந்துக்கு கொரோனா உறுதி

மேலும் இன்று அதிகாலை முதலே மூச்சுவிடுதலில் மிகவும் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் மூலம் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விஜயகாந்த்-ன் உடல்நிலை குறித்து அறிய ரசிகர்கள், தொண்டர்கள் வரலாம் என்பதால் பாதுகாப்பு நலன் கருதி மருத்துவமனையின் முன்புறம் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 9 மணியளவில் விஜயகாந்த்-ன் உடல்நிலை குறித்து மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிடவுள்ளது. அவர் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.