தமிழ்நாடு

சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு

சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு

Rasus

சங்கரன்கோவில் அருகே பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை, சாலையோரம் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் டவுன் காவலர் அந்தோணி ராஜ். இவர் இன்று அதிகாலை சங்கரன்கோவில் ரயில்வே பீட்டர் ரோட்டில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள தனியார்  ரைஸ் மில் அருகே உள்ள காலி இடத்தில் குழந்தை அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்று பார்த்தபோது அங்கு பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை தொப்புள் கொடி அறுக்காத  நிலையில் கிடந்துள்ளது.

இதனையடுத்து அந்தோணி ராஜ் குழந்தையை மீட்டு உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். குழந்தையை வளர்க்க முடியாமல் வீசி  விட்டுச் சென்றார்களா...? அல்லது தவறான பழக்கத்தின் மூலம் குழந்தை பிறந்ததா..? என பல கோணங்களில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர்.