அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளால் சாதிக்க முடியாததை அரசு பள்ளியில் படித்த இந்திய விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுக்கும் முறையை ரத்து செய்யக்கோரியும், அரசுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரியும் இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை, கடலூர், சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட நான்கு இடங்களில் சைக்கிள் பேரணி நடத்தினர். இதன் ஒருபகுதியாக கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு துவங்கிய சைக்கிள் பேரணியை இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி ஆறு நாட்களில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல்,கரூர் வழியாக திருச்சியை அடைகிறது.
இந்நிகழ்ச்சியில் பேசிய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் சாதிக்க முடியாததை சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பி அரசு பள்ளியில் படித்த இந்திய விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர் என பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தகுதியும் திறமையும் அதிகமாக உள்ளதாகவும் கூறிய அவர், ஒவ்வொரு மாணவனுக்காகவும் அரசு 30000 ரூபாய் வரை செலவு செய்கிறது என்றார். பல்வேறு அமைப்புகளும், முன்னாள் மாணவர்களும் அரசு பள்ளிகளுக்கு பல உதவிகளை செய்து வருகின்றனர், இதனால் கல்விதரம் உயர்ந்து, மாணவர்களின் திறன் உயர்வதோடு,அடுத்த தலைமுறைக்கும் அது உதவியாக உள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அரசு பள்ளியிலும் அன்னைத்தமிழிலும் தங்கள் பிள்ளைகள் படிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் இதில் அகில இந்திய மாணவர் இயக்கத்தின் தலைவர் ஷானு,ஜனநாய வாலிபர் சங்கத்தின் மாநிலத்தலைவர் பாலா உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.