தமிழ்நாடு

நடுக்கடலில் தேசியக் கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாடிய நாகை மீனவர்கள்

நடுக்கடலில் தேசியக் கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாடிய நாகை மீனவர்கள்

webteam

நடுக்கடலில் தேசியக் கொடியேற்றி பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி 76-வது சுதந்திர தின விழாவை நாகை மீனவர்கள் கொண்டாடினர்.

இந்திய திருநாட்டின் 76-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை நாட்டு மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக வீடுகள், கடைகள், அரசு அலுவலகங்கள், பொது இடங்கள் என எங்கு பார்த்தாலும் தேசியக் கொடியை பறக்கவிட்டு பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், படகில் நடு கடலுக்குச் சென்று தேசியக் கொடியை ஏற்றி அசத்தி உள்ளனர் நாகை மாவட்ட மீனவர்கள். நாகூர், பட்டினச்சேரி ஆரியநாட்டு தெருவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று அதிகாலை படகில் நடுகடலுக்குச் சென்றனர். அங்கு 25 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தை நடுக்கடல் நீரில் மிதக்கவிட்ட மீனவர்கள் படகில் இருந்தபடியே தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து வந்தே மாதரம் என முழக்கமிட்ட மீனவர்கள் பட்டாசு வெடித்தும், படகில் இருந்தபடியே இனிப்புகள் வழங்கியும் சுதந்திர தின விழாவை கொண்டாடினர். நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி கிராம மீனவர்கள் நடுக்கடலில் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினவிழாவை கொண்டாடியதை பலரும் பாராட்டி வருகின்றனர்.